Wednesday, December 26, 2012

6. சிரித்து வாழ வேண்டும்


1. "உங்க ஹோட்டல்ல பலகாரங்களோட லிஸ்டுக்குப் பக்கத்தில 'ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர்' என்றெல்லாம் எழுதி வைத்தததிருக்கிறீர்களே?"

"சாப்பிட்டு விட்டுக் காசு கொடுக்க முடியாதவர்கள் அரைக்க வேண்டிய மாவின் அளவு அது!"

2. "உங்க கம்பெனி கணக்குகளை சி ஏ ஜி ஆடிட் பண்ணப் போறாராமே , ஏதாவது தில்லு முல்லா?"

"ஆடிட் பண்ணப் போவது எங்கள் கம்பெனியின் சார்ட்டட் அக்கவுண்டண்ட்தான் . எங்கள் மானேஜர் அவரை மரியாதையாக சி ஏ ஜி என்றுதான் குறிப்பிடுவார். "

3. "உங்கள் ஆபீஸ் முதல் உதவிப் பெட்டியில் தூக்க மாத்திரை கூட இருக்கிறதே?"

"ஆபீசில் தூக்கம்  வராதவர்களுக்குத்தான் அது!"

4. "என் வகுப்பு ஆசிரியருக்கு எப்பவுமே என் மேல தனி மதிப்பு உண்டு."

"அப்படியா?"

"ஆமாம். மத்த பையன்களை எல்லாம் எருமைன்னு திட்டினா என்னை மட்டும் 'டெல்லி எருமை'ன்னுதான் திட்டுவார்!"

5. "என்ன, நீ கலெக்டர் ஆகா முடியாம போனதுக்கு, உங்க பள்ளி ஆசிரியைதான் காரணமா?"

"ஆமாம். அவர் மட்டும் என்னை அஞ்சாங் கிளாசில் பெயில் ஆக்காம இருந்திருந்தார்னா, நான் ஐ.எ.எஸ் படிச்சு கலெக்டர் ஆகியிருப்பேன்."

6. "இந்தக் காலனிக்கு ஏன் 'ஜோக் அடிச்சான் புரம்'னு பேரு?

"இங்க வீடு கட்டியிருக்கிரவங்க எல்லாம் பத்திரிகையில ஜோக் எழுதிச் சம்பாதிச்ச பணத்தில்தானே வீடு கட்டி இருக்காங்க!"

7. "நேரு மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தார்னா..?"

"என்ன ஆகியிருக்கும்?"

'அவருக்குத் தொண்ணுத்தஞ்சு வயசு ஆகியிருக்கும்!"

8. "நம்ம சுந்தரம் இன்னிக்கு ஒரு விபத்திலே மாட்டிக்கிட்டு தெய்வாதீனமா உயிர் பிழச்சுட்டான். பெரிய கண்டத்திலிருந்து தப்பிச்சிருக்கான்."

"அப்ப இன்னிக்கு அவனுக்கு சுந்தர கண்டம்னு சொல்லு!"

9. "நம்ப அண்ணன் ரொம்ப முன் யோசனை உள்ளவர்."

"எப்படிச் சொல்றே?"

"நம்ப தலைவர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதுமே, கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில பறக்க விட்டுட்டார்!"

10. சென்னைத் தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்ச்சியில்:
"புதிய நாடகங்களை நாங்கள் ஒளி பரப்புவதில்லை  என்று ஒரு நேயர் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் பல பழைய நாடகங்களையே பலமுறை மறுஒளிபரப்பு செய்ய வேண்டியிருப்பதால், இப்போதைக்குப் புதிய நாடகங்களை ஒளிபரப்ப இயலாத நிலையில் இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

11. "முன்னாள் நடிகருக்கு நம் ஆஃபிசில் வேலைகொடுத்தது தப்பாகப் போய் விட்டது."

"ஏன்?"

"கொஞ்சம் கடினமான வேலையாக இருந்தால் 'டூப் வைத்துச் செய்து கொள்ளுங்கள்' என்கிறார்"

12. " 'சிறிதளவு 'வின்' பயன்படுத்தினால் போதும்' என்று நம் டிடர்ஜன்ட் சோப்புக்கு விளம்பரம் கொடுத்தது தப்பாகப் போய் விட்டது."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"எல்லோரும் நம் 'வின்' சோப்பைச் சிறிதளவே பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால், நம் சோப் விற்பனை மிகவும் குறைந்து விட்டது!"

13. "நடிகரின் கணவர் கார் விபத்தில் காலமானார்' என்று செய்தி போட்டதற்காக ஆசிரியர் என்னைக் கோபித்துக் கொண்டார்."

"ஏன், செய்தி உண்மை இல்லையா?"

"எந்தக் கணவர் என்று போடவில்லையாம்!"

14. "என்னது? உன் காதலர் உன்னைக் கைவிட்டதற்குக் காரணம் சுண்டலா?"

"ஆமாம். தினமும் கடற்கரையில் எனக்குச் சுண்டல் வாங்கிக் கொடுத்த கடனைத் தீர்க்க முடியாமல், சுண்டல் விற்பவரின் மகளையே கல்யாணம் செய்துகொண்டு விட்டார்!"

15. "இந்தக் காலத்தில் திறமைக்கு மதிப்பே இல்லை. என் திறமையைக் காட்டியதற்குப் பரிசு சிறைத் தண்டனைதான்!"
       -  அலுத்துக் கொண்டவர் ஒரு ஃபோர்ஜரிக்காரர்.

16. "என்னய்யா இது? உங்கள் சர்வர் போன வருஷம் போட்ட மைசூர் பாக்கைக் கொடுத்திருக்கிறாரே!"

"இருக்காதே! இரண்டு வருஷம் முன்பு போட்ட மைசூர் பாக் தீராதவரை, போன வருஷ் ஸ்டாக்கை எடுக்கக் கூடாது என்று அவரிடம் ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருக்கிறேனே!"

17. அரசர்: அமைச்சரே! ஏன் கல்யாண விருந்து முடிந்ததும் எச்சில் இலையை எடுக்க எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள்?

அமைச்சர்: இளவரசரின் திருமண விருந்தில் வாழை இலைக்குப் பதிலாக வெள்ளித் தகடுகளை அல்லவா போட்டிருக்கிறார் உங்கள் சம்பந்தி மன்னர்!

18. அரசர்: அமைச்சரே! நம் ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிவது பற்றி இப்போதெல்லாம் புலவர்கள் யாரும் பாராட்டிப் பாடுவதில்லையே, ஏன்?

அமைச்சர்: நாம் சில்வர் அயோடைடைத் தூவி செயற்கை மழை பொழிய வைத்த விவரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலும்!

19. "நீங்க இப்ப அமைச்சரா இருக்கீங்கங்கறதுக்காக நீங்க செய்யப்போற ஊழலுக்கெல்லாம் இப்பவே முன் ஜாமீன் வாங்க சட்டத்த்தில் இடமில்லை."

20. "என் கட்சிக்காரர் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாததால், அவரைக் கட்டிலோடு சேர்த்து கிரேனில் தூக்கி நீதிமன்ற வாசலுக்குக் கொண்டு வந்திருக்கிறோம், யுவர் ஆனர்."

21. "ஹோட்டல் சரக்கு மாஸ்டரைக் கல்யாண சமையலுக்குப் போட்டது தப்பாப் போச்சு.'

"ஏன்?"

"முந்தின கல்யாணங்களில் செஞ்ச அயிட்டங்கள் மீதி இருந்தா கொடுங்க, புதுச் சரக்கா மாத்திடறேங்கறாரு."

22. "நம்ப தலைவர் படு கில்லாடி. நேத்து அவருக்குப் பொறந்த குழந்தைக்குக் கூட முன் ஜாமினுக்கு அப்ளை பண்ணிட்டாரு!"

23. "சமீப காலமா நம்ம ஊர்ல செருப்பு விற்பனை அதிகமாயிருக்கிறதைப் பத்தி தலைவர் ரொம்பக் கவலையா இருக்காரு."

"ஏன்?'

"தேர்தல் பிரசாரத்தின்போது, 'நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னைச் செருப்பால் அடியுங்கள்' என்று பேசியதை நினைத்துத்தான்!"

24. "நம்ம தலைவர் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியதில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கிறதாம்."

"என்ன முறைகேடுகள்?"

"அவரைச் சந்தித்துப் பேசிய பல 'கட்சி உறுப்பினர்கள்' போலி உறுப்பினர்களாம்!

25. "கட்டிட நிதிக்காக நம்ப தலைவர் திரட்டின நிதி என்ன ஆச்சு?"

"நாமதான் ஆட்சிக்கு வரப் போறோம்னு மனக்கோட்டை கட்டினதுக்கே எல்லாப் பணமும் சரியாப் போயிடுச்சாம்."

26. "நம்ம தலைவர் ஆனாலும் ரொம்ப விஷயம் தெரியாதவரா இருக்காரு."

"ஏன் அப்படிச் சொல்றே?"

"திட்டக் கமிஷனுக்கு அரசாங்கம் உறுப்பினர்களை நியமிச்ச செய்தியைக் கேட்டு விட்டு, 'என்னைத் திட்டறதுக்காகக் கமிஷன் போட்டிருப்பது அநியாயம்' என்று அறிக்கை விட்டிருக்காரு!"

27. "பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்வதை நிறுத்த மாட்டோம்னு சொன்னதைத் தலைவர் செயலிலே காண்பிச்சுட்டாரு."

"என்ன செஞ்சாரு?"

"புதுசா ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சிருக்காராம்!"

28. "ரௌடி ராக்கப்பன் செயின் திருட்டு பற்றிப் புகார் கொடுக்க வந்திருக்கான்."

"அவன் பொண்டாட்டி செயினை யாராவது அறுத்துக்கிட்டுப் போயிட்டாங்களா?"

"இல்லை. சைக்கிள் செயினோட அவன் ரோட்டில நடந்து வந்துகிட்டு இருக்கச்சே, யாரோ மோட்டர் சைக்கிளில் வந்து அவன் கையிலிருந்த செயினைப் பிடுங்கிக்கிட்டுப் போயிட்டாங்களாம்!"

29. "செயின் திருட்டை விசாரிக்கப் போன 427 என்ன ஆனாரு?"

"அவர் சைக்கிளை நிறுத்தி விட்டுப் போனபோது யாரோ அவர் சைக்கிள் செயினைக் கழட்டிக்கிட்டுப் போயிட்டாங்களாம்!"

30. "தலைவரே, வழக்கில நாம தோத்துட்டோம்."

"கள்ள ஒட்டுத்தான் தோல்விக்குக் காரணம்னு அறிக்கை விட்டுடுங்க!"

31. "ஒரு தபால்காரர் கதை எழுதினால் எழுதி முடித்த பின் என்ன செய்வார்?"

"பின் கோடு போடுவார்."

32. "வீடு பூரா பத்தி எரியுது. என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?"

"பத்தி எரியற  வாசனையை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்."

33. என்னதான் பெரிய பணக்காரர் என்றாலும் தாடியைக் கூட ஆபரேஷன் பண்ணித்தான் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் இன்னொரு மனிதரை நான் பார்த்ததில்லை!

34. சார்! இந்தக் கட்டிடத்துக்கு உங்களை அடிக்கல் நாட்டச் சொன்னது உண்மைதான். அதற்காக ஒவ்வொரு கல்லையும் மிதித்துத் தரையில் நாட்ட வேண்டும் என்று அவசியமில்லை!

35. "ஒண்ணுமில்லை, தலைக்கு ஹேர் டை போட்டுக்கல. தன் முகத்தைக் கண்ணாடியில பாத்துட்டு மயங்கி விழுந்துட்டா!"

36. "மேலே இருப்பவர் எங்கள் சர்க்கஸ் முதலாளிதான். எங்கள் சம்பள பாக்கியை உடனே கொடுப்பதாக ஒப்புக் கொண்டால்தான் கீழே இறக்குவோம்."

தீபாவளி!

1) "ஏம்ப்பா, என்  வீட்டுக்காரருக்குக் குழழந்தை மனசுன்னு எவ்வளவு தடவை சுல்லி இருக்கேன்? அப்படி இருந்தும் இப்படிப் பண்ணிட்டீங்களே!"

"ஏம்மா, என்னாச்சு?"

":தீபாவளிப் பட்டாசு எல்லாம் ஒரே வெடிகளா இருக்காம். ஒரு கம்பி மத்தாப்புக் கூட இல்லேன்னு கோவிச்சுட்டுப் போயிட்டாரு!"

2)  "என்ன வெடிச்சத்தம் கேக்குதே, அதுக்குள்ளேயாவா பொழுது விடிஞ்சுடுச்சு"
  
      "அது வெடிச்சத்தம் இல்ல. உங்கப்பா பொடி போட்டுட்டுத் தும்மறாரு. பேசாம தூங்கு."

  3)    ":தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர மாட்டேன்னுட்டாரு. என் பெண்ணை மட்டும் அழைச்சுக்கிட்டு வந்து அவளுக்குத் தலை தீபாவளி கொண்டாடிட்டேன்."

"அப்ப அது ஒருதலை தீபாவளின்னு சொல்லுங்க!"

4)  "உலகத்திலேயே அதிகமான தலை தீபாவளிகள் கொண்டாடினவரு யாரு தெரியுமா?"

"யாரு?"

"தசரத மகாராஜாதான். அவர் 60,000 தலை தீபாவளிகள் கொண்டாடி இருப்பாரே!"

5)  "என்ன டெய்லர், ஏன் சோகமா இருக்கீங்க?"

"தீபாவளி  டிரஸ்கள் தைக்கறதில பிசியா இருந்ததிலர என் மாப்பிள்ளையீட தீபவளி டிரஸ்ஸைத் தைக்காம போயிட்டேன். தலை தீபாவளிக்காக வந்த அவரு கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போயிட்டாரு."

6) "இந்த வருஷம் தலை தீபாவளி ஜோக்ஸை யார் அனுப்பினாலும் பிரசுரிக்க வேண்டாம்னு ஆசிரியர் கண்டிப்பா சொல்லிட்டாரு."

"ஏன்?"

"போன வருஷம் அவருக்கு தலை தீபாவளியாச்சே! அந்த அனுபவத்தில எல்லா ஜோக்ஸையும் அவரே எழுதப் போறாராம்!"

7) அப்பா: என்ன மாப்பிள்ளை, தீபாவளி பட்சணமெல்லாம் எப்படி இருந்தது?"

    மகள்: பிரமாதம்ப்பா! என்ன இருந்தாலும் உங்க கைப்பக்குவம் இவருக்கு வரதில்ல!"

8) "வாங்க மாப்பிள்ளை! என்ன தலை தீபாவளிக்கு நீங்க மட்டும் வந்திருக்கீங்க? மீன வரலியா?"

"உங்க பெண்ணுக்கு லீவு கிடைக்கல. அதனால என்னை மட்டும் அனுப்பி வச்சிருக்கா!"

9) "தலை தீபாவளிக்கு 'நரகாசுரபவன்'லதான் ஸ்வீட் வாங்குவீங்களா, ஏன்?"

"என் முதல் மாப்பிள்ளையோட தலைதீபாவளிசமயத்தில தயாரிச்ச அதே ஸ்வீட்களை என் அஞ்சாவது மாப்பிள்ளையோட தலை தீபவளிக்கும் சப்ளை பண்றாங்களே, அந்த ராசிக்காகத்தான்!"

10) "உன் மாமனார் ஏன் ரொம்பக் கோவமா இருக்காரு?"

       "அவரோட அறுபதாம் கல்யாணத்துக்கு அப்புறம் வந்த தலை தீபாவளிக்கு அவர் மாப்பிள்ளைகள் யாரும் சரியா சீர் செய்யலியாம்!"

11) "எங்கப்பா தீபாவளிக்கு சிவகாசிக்குப் போய் பட்டாசுத் தொழிற்சாலைகளிலிருந்தே பட்டாசு வாங்கிக்கிட்டு வருவாரு.

"இது என்ன பிரமாதம்? எங்கப்பா போன வருஷம் சேகரிச்ச வெடிக்காத பட்டாசுகளிலிருந்து வெடிமருந்தை எடுத்துத் திரியெல்லாம் வச்சுப் புதுப் பட்டாசுகளையே உருவாக்கிடுவாரு.

12) "என்ன மாப்பிள்ளை, தீபாவளிக்கு எடுத்த பட்டு புடவை எப்படி இருக்கு?"

"இங்கே பாருங்க மாமா, தீபாவளிக்கு நீங்க உங்க பெண்ணுக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்காட்டா பரவாயில்ல.. உங்க பெண் பட்டுவுக்கு ஒரு சாதாரணப் படவை வாங்கிக் கொடுத்துட்டு பட்டு புடவை நல்லா இருக்கான்னு கேக்கறது நல்லாயில்ல."

13) ஹோட்டல் சரக்கு மாஸ்டர் (பத்திரிகை ஆசிரியரிடம்): உங்க பாடு பரவாயில்ல சார்! தீபாவளி ஜோக்ஸ்னு சொல்லிப் போன வருஷ ஸ்டாக்ல மீதி இருக்கிறதையெல்லாம் இந்த வருஷம் போட்டுடுவீங்க. நான் பாருங்க, ஒவ்வொரு வருஷமும் புதுசா ஸ்வீட் போட வேண்டி இருக்கு!"

14)  "ராக்கெட், ஏரோப்ளேன் எல்லாம் தெரியும், அது என்ன விலைவாசி வெடி?"

        "புதுசா வந்திருக்கு. ராக்கெட்டை விட மேலே போகும். ஆனா கீழே வராது!"

15)  அப்பாவுக்கு,

தீபாவளிக்கு முதல் நாள் நான் அங்கே வருகிறேன்.உங்கள் மாப்பிள்ளையை நான்கு நாட்கள் முன்பே அனுப்பி வைக்கிறேன்.தீபாவளிபட்சணங்கள் செய்ய உங்களுக்கு உதவியாக இருப்பார்."